
நாடு முழுதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கான, “பி.எச்., பதிவெண்”(BH Vehicle registration) முறை, நேற்று நடைமுறைக்கு வந்தது. வாகனங்கள் பதிவின் போது, மாநிலத்தின் முதல் எழுத்தை பதிவது வழக்கம்.
ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலத்துக்கு இடம் மாறினால், பதிவு எண்ணை மாற்ற வேண்டும். பதிவு செய்த மாநிலத்தில் தடையில்லா சான்று பெற்று, தங்கியுள்ள மாநிலத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்து, வாகன பதிவு எண்ணை மாற்றிக் கொள்ளலாம்; உரிய சாலை வரி செலுத்த வேண்டும். இதில், மாநிலத்துக்கு மாநிலம் சாலை வரியில் உள்ள மாறுபாடு, ஏற்கனவே இருந்த மாநிலத்தில் பயன்படுத்தாத ஆண்டுகளுக்கான சாலை வரியை திரும்பப் பெறுவதில் சிக்கல் என, பல பிரச்னைகள் உள்ளன.

அதிலும், வியாபார ரீதியாகவோ, பணி ரீதியாகவோ அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் செல்வோருக்கு, இந்த முறையால் பல சிக்கல்களை அனுபவிக்கும் நிலை உள்ளது.இந்நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் அடிக்கடி இடம்பெயர்வோரின் வாகனங்களுக்கு ஒரே மாதிரியான பதிவெண் வழங்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், பி.எச்., எனும் ஆங்கில எழுத்து வரிசையுடன், பதிவெண்களை வழங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டது. இது குறித்து, ஆட்சேபம் தெரிவிக்க வழங்கப்பட்ட 30 நாட்கள் கெடு நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து, நாடு முழுதும் நேற்று முதல், பி.எச்., வரிசை பதிவெண் முறை அமலாகியுள்ளது.
இனி, மாநிலம் விட்டு மாநிலம், வாகனத்தை இடம் மாற்றி உபயோகிப்போர், மத்திய அரசின், ‘வாகன்’ இணையதளத்தில், விண்ணப்ப படிவம் – 60ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு, ‘பாரத்’ என்ற வார்த்தையின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்களான பி.எச்., எனும் வரிசையில் உள்ள பதிவெண்களை பெறலாம். இந்த பதிவெண், மத்திய சாலை போக்குவரத்து தரவு தரத்தின் வாயிலாக பதிவு செய்யப்படுவதால், மாநிலங்களுக்குள் பிரச்னை வராது.